நேற்று (23-05-2014) கிட்டதட்ட 10-12 வருடங்களுக்கு பின்னதாக மீண்டும் ஒரு புதிய தொழிலில் முதன் முறையாக ரூ.240/- லாபம் ஈட்டியுள்ளேன் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும். அப்படியெனில் இத்தனை வருடமாக நட்டமா என்று கேட்க கூடாது. துணி ஏற்றுமதி தொழிலில் இருந்து கணிணி மென்பொருள் துறையினுள் நுழைந்த போது பெற்ற முதல் வருவாய் என்பது இன்றும் நீங்காது நினைவில் இருக்கிறது. அதன் பின்னர் பல்வேறு தொழில் முனைப்புகளாக இணைய வணிகம், சிலவகையான இணைய தள ரீதியிலான சேவை என்று எனது உழைப்பினையோ அல்லது முதலீட்டினையோ கோரியவைகளில் இருந்து வரவினையே காண இயலவில்லை. வரவு என்பதற்கும் லாபம் என்பதற்கும் வெவ்வேறு வித்தியாசம் இருப்பதை உணர்வது அவசியம். சில தொழில் முனைப்புகள் நீண்ட கால முதலீட்டினை கோரியதோ ஒழிய அதலிருந்து நாம் வருவாய் பெறக்கூடிய கால அளவினை சற்றும் கணிக்க இயலவில்லை.
அதே சமயம் இந்த தொழிலில் நட்டம் வராதா என்ற கேள்வியும் வேறு ஒருவர் கேட்டார். மென்பொருள் தொழில் நட்டம் வரதா… நம்மை வேலை செய்ய சொல்லி விட்டு முன்பணம் கொடுக்காத சூழலில் ஒட்டு மொத்த பணியினையே இரத்து செய்வது, மென்பொருளை வாங்கி பயன்படுத்தி கொண்டு நமக்கு பாக்கியினை கொடுக்காமல் அல்வா கொடுப்பது, சில நிறுவனங்களுக்கு வேலையில்லாத சூழலில் வாடகை, சம்பளம், பாராமரிப்பு செலவு தாங்காமல் போதல். இப்படி எந்தவொரு முயற்சியிலும் வெற்றி, தோல்வி என்பது சரி சமமே. எனக்கென்னவோ முற்காலத்தில் என் தந்தையார் நடத்தி நான் அனுபவபட்ட நிதி சம்பந்தபட்ட துறை போல எனக்கான துறையாக கருத இயலுகிறது.
நான் எனது பலவீனமான பகுதியாக கருதுவது மக்களை கவர்ந்து சந்தையிடல் பகுதியாகும். அத்தகைய தேவை இந்த தொழில் தேவையில்லை என்பதே மிகப் பெரிய ஆறுதல். எந்தளவு உழைத்து நல்முதலீட்டு வாய்ப்பினை கண்டறிகிறோமோ அந்தளவு நமக்கு லாபம் வரகூடும். மற்றபடி ஊழியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என்ற இன்ன பிற செலவுகள் இன்றி வெகு தொலைவுக்கு நம்மால் கொண்டு செலுத்த இயலகூடியதாக உள்ளது. மென்பொருள் துறையில் ஒவ்வொரு தலையினை அதிகரிக்க அதிகரிக்க உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அந்தளவு நமக்கு வேலைகள் அதிகரிக்க வேண்டும். இல்லாது போனல் உதாரணமாக ஒரு 10ஊழியர்கள் உள்ள கட்டமைப்பினை வைத்து கொண்டு நாம் ஓரிரு மாதம் தக்க வேலையின்றி இருப்பின் நமது முதலீடு என்பது அவ்வளவு தான். எந்த தொழிலிலும் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே இருக்கும். பங்கு முதலீடுகளிலும் எதிர்மறை கருத்துண்டு. அதை பின்னொரு சமயம் பார்ப்போம். வெறும் ரூ.240 க்கு இம்மாம் பெரிய கட்டுரையா என்ற கேள்வி உங்களுக்குள் வரும் எனில் யாருக்குமே நாம் பெறும் முதல் அனுபவமே மிக முக்கியமான ஒன்றாகும். சரி என்ன நடந்துள்ளது என்பதை காண்போம்.
முந்தைய கட்டுரை ஒன்றில் (பங்குவணிகம் – 25/04/2014) – Rain Industries என்ற நிறுவனத்தின் பங்கு வாங்கியதை பற்றி கூறியிருந்தேன். விலை ரூ.41.65 என்ற ரீதியில் 48 பங்குகள் வாங்கியிருந்தேன். நான் இதனை நிறுவனத்தின் வரவு,செலவு போன்ற அடிப்படை காரணிகள்(fundamentals) முன்னிட்டு தெரிவு செய்திருந்தேன். அதே சமயம் இதன் தொழில்நுட்ப காரணிகளை (technical analysis) கவனிக்கவில்லை. வாங்கிய அன்றே இதன் விலை சரிந்து விட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் புகழ்பெற்ற பன்னாட்டு நிதிநிறுவனம் (மெரில் லிரிஞ்) தன்னுடைய 1,42,16,260 -எண்ணிக்கையிலான 8சதவீத பங்கை ரூ35 என்ற விலைக்கு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு விற்று விட்டது. சந்தையில் வெளிநாட்டுக்கார னே விற்று விட்டான். அப்படியெனில் நிறுவனம் சரியில்லை என்ற ஓலம். ஆனால் அந்த சமயத்திலும் ஓரிருவர் அட அவனுக்கு என்ன தேவையோ அவசரத்துக்கு வித்திருப்பான் என்றும் பேசினார்கள். நிறுவனத்தின் வரவு, செலவு நிதிநிலையறிக்கையை கவனியுங்கள் என்று ஓரிருவர் மட்டுமே பேசினார்கள். மற்ற அனைவருமே அவ்வளவுதான் கம்பேனி குளோஸ் என்று பரபரத்தார்கள். ரூபாய் 30.60 என்ற அளவிற்க்கு அடித்து நொறுக்க பட்டது. பின்னர் அனைவருக்கும் மயக்கம் தெளிந்து அடடா இம்புட்டு நல்ல கம்பேனியை தப்பா நினைச்சுட்டேமே என்று பாராட்டி, சீராட்டி தூக்கி வைக்க ஆரம்பித்தனர். தூக்கிய தூக்கில் எனது கணிப்பான ரூபாய் 50 நோக்கி பாய்ந்தது. நான் ரூ.46.65 (12% லாபம்) என்ற அளவில் வெளியேற முன்னதாகவே முடிவு செய்திருந்தேன். அதனால் வெளியேறி விட்டேன். நமது விலையினையும் தாண்டி 48.90 என்பதாக மேலே சென்று உச்ச கட்டுபாட்டு விலையளவினை (up-side freeze) அடைந்து நின்றது. இதன் அர்த்தம் யாதெனில் இதற்க்கு மேல் இன்றைக்கு – 20% – விலையுயர்வினை சந்தை அனுமதிக்காது. இந்த நிலையில் பங்கினை வாங்க மட்டுமே ஆட்கள் இருப்பார்கள் யாரும் விற்க முன்வர மாட்டார்கள். நமது முதலீடான ரூ.2000 க்கு ரூ.240 என்பது 12% லாபமாக்கும் என்பது கவனிக்க தக்கது.
அடுத்ததாக வெறுமே தொழில்நுட்ப காரணிகளை மட்டுமே வைத்து ஒரு நிறுவன பங்கினை வாங்க முயலுகிறேன். ரூபாய் 20/- என்ற அளவில் உள்ள அது நமக்கு லாபத்தை ஈட்டி தர போகிறதா அல்லது முதல்-நட்டம் என்ற கட்டுரைக்கு தூண்டுகிறதா என்பதை இனி வரும் காலங்களில் பொறுத்திருந்து காண்போமாக..
வருக!